தீரன் சின்னமலை ஆக நடிக்கும் சிபிராஜ்
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் தீரன் சின்னமலை. அவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க இயக்குனர் ஸ்ரீராம் முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க நடிகர் சிபிராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சினிமா நடிகரான சிபிராஜ் மேடை நாடகத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. இதுகுறித்து சிபிராஜ் கூறுகையில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஒரு மிகச்சிறந்த வீரர். அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதுவும் நாடகத்தில் நடிப்பது என்பது எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்.
சினிமாவில் நடிக்கும் பொழுது ஏதாவது தவறு செய்துவிட்டால் மறுபடியும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது டப்பிங்கில் சரிசெய்துவிடலாம். ஆனால் மேடை நாடகத்தில் அப்படி எல்லாம் சரி செய்து விட முடியாது. எனவே இது எனது வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
எம்ஜிஆர், சிவாஜி, எனது தந்தை சத்யராஜ் உட்பட பெரிய நடிகர்கள் பலர் மேடை நாடகத்தில் இருந்துதான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது நடிகர்கள் மேடை நாடகங்களில் நடிப்பது முற்றிலும் குறைந்து விட்டது. இதை உணர்ந்துதான் மேடை நாடகத்தில் நடிக்க சம்மதிக்கிறேன் என சிபிராஜ் கூறியுள்ளார்.