மாஸ்டர் வரவேற்பு, வசூல் - ஓடிடி நிறுவனங்களுக்குப் பின்னடைவு
கொரோனா தொற்று பரவிய கடந்த வருட மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. பொழுதுபோக்கிற்காக தியேட்டர்களுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்த்து ரசித்த மக்களுக்கு மாற்றாக அமைந்தது ஓடிடி தளங்கள்.
பார்க்காமல் விட்ட சில புதிய படங்கள், மீண்டும் பார்க்க நினைத்த பழைய படங்கள், வேறு மொழிகளில் ஹிட்டான படங்கள் என அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தார்கள். திடீரென ஓடிடி தளங்களுக்கு வரவேற்பு கிடைக்க அதைத் தக்க வைக்க அந்த நிறுவனங்கள் முயற்சி செய்தன.
தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் புதிய படங்களையே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் வெளியிட்ட சில படங்களுக்கு வரவேற்பே கிடைக்கவில்லை. சமூக வலைத்தளங்களிலும் ஓடிடி வெளியீடுகளைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள்.
அந்தக் கிண்டல் அதிகமாவதற்குள் தீபாவளியை முன்னிட்டு சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு படங்கள் நேரடியாக வெளிவந்து அவர்களைக் காப்பாற்றியது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அப்படியே மாஸ்டர் படத்தையும் மல்லுக்கட்டி இழுத்து வந்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி என்ற கணக்காக தியேட்டர்களில் மட்டும்தான் வெளியீடு என அதன் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தார்கள்.
கொரோனா பயத்தை மீறி 50 சதவீத இருக்கைகளுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் மீறி முன்பதிவிலேயே படத்தை பார்க்க நாங்கள் ரெடி என ஒரு வாரத்திற்கு முன்பதிவு செய்தார்கள் ரசிகர்கள். மாஸ்டர் படத்திற்கான வசூல் 200 கோடியைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வசூல் ஓடிடி தளங்களக்கு ஒரு பின்னடைவாக அமைந்துவிட்டது.
இதற்கடுத்து கார்த்தி நடித்துள்ள சுல்தான், விஷால் நடித்துள்ள சக்ரா உள்ளிட்ட சில படங்களை ஓடிடிக்கு இழுக்க முயற்சித்தார்கள். பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டதாகச் சொன்ன நிலையில் அதன் தயாரிப்பாளர்கள் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டார்களாம். மேலும், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வேறு சில முன்னணி நடிகர்களின் படங்களையும் தியேட்டர்களிலேயே வெளியிடத் தயாராகி வருகிறார்களாம்.
ஓடிடி தளங்களுக்கு தீபாவளிக்குக் கை கொடுத்த படங்கள் பொங்கலுக்கு காலை வாரிவிட்டுவிட்டன. பொங்கலை முன்னிட்டு வெளியான மாதவன் நடித்த மாறா, ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்ததும் ஒரு காரணமாகிவிட்டது.
கடந்த மார்ச் மாதம் ஓடிடி தளங்களில் ஒரு வருடத்திற்கு உறுப்பினராகச் சேர்ந்த பலர், அடுத்த வருடத்திற்கான புதுப்பித்தலை செய்யத் தயங்குவார்கள். எனவே, தங்களுக்குக் கிடைத்த உறுப்பினர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ஓடிடி தளங்கள் எப்படியாவது புதிய படங்களை வெளியிட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.