உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மருமகனுடன் நடிக்க மகள் மறுத்து விட்டாள்: அர்ஜுன்

என் மருமகனுடன் நடிக்க மகள் மறுத்து விட்டாள்: அர்ஜுன்

அர்ஜூனின் தங்கை மகன் துருவா சார்ஜா கன்னடத்தில் வளர்ந்து வரும் ஆக்ஷன் ஹீரோ. அவர் தற்போது நடித்துள்ள படம் தமிழில் செமதிமிரு என்ற பெயரில் வெளிவருகிறது. இதனை அர்ஜுன் வெளியிடுகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். நாளை (19ம் தேதி) வெளிவருகிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் அர்ஜுன் பேசியதாவது:

துருவா என் தங்கச்சியோட மகன். முறைக்குதான் அவர் எனக்கு மருமகனே தவிர, அவரும் எனக்கு மகன் மாதிரிதான். துருவாவோட, அண்ணன் சிரஞ்சீவி சார்ஜா. அவருக்கு நடிக்க வர்றதுல ஆர்வம் இருந்துச்சு. அதுக்கேத்தபடி அவரை உடற்திறன், கராத்தே, பாக்ஸிங், பாம்பேல நடிப்புப் பயிற்சின்னு நல்லா டிரெய்ன் பண்ணேன். ஆனா அவர் எங்களை விட்டுப் போய்ட்டார்ங்கிறது வேதனையான விஷயம்.

சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்த காலகட்டத்துல, துருவா தனக்கும் நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதெல்லாம் சுலபம் இல்லை. நீ சின்னப்பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்னு அட்வைஸ் பண்ணேன். அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து வளர்ந்திக்கிறார்.

கடந்த ஏழு வருஷத்துல மூன்று படங்கள்தான் நடிச்சிருக்கார். அத்தனையும் ஹிட். நிறைய படங்கள் நடிக்கணும்கிறதை விட நல்ல படங்கள் நடிக்கணும்கிறதுல உறுதியா இருக்கார். பணம் சம்பாதிக்கிறதைவிட பெயரைச் சம்பாதிக்கணும்கிற எண்ணம் இருக்கு. அதுக்காக ரொம்பவே அர்ப்பணிப்போட ஒவ்வொரு விஷயத்தையும் பண்றார்.

இந்த செம திமிரு படமும் அவருக்கு பெரியளவுல பெயர் வாங்கிக் கொடுக்கப் போற படமா இருக்கும். இந்த படத்துக்காக இரண்டரை வருஷம் கடுமையா உழைச்சிருக்கார். படத்துல 16 வயசுப் பையன், நல்லா வளர்ந்த இளைஞன்னு ரெண்டு விதமா வர்றார். சிறுவயது தோற்றத்துல நடிக்கிறதுக்காக 40 கிலோவரை எடை குறைச்சார். அந்தளவு நடிப்பு மேல ஈடுபாடு. படத்துல சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடின்னு எல்லாம் இருக்கும். ஆக்ஷன் ரொம்பவே தூக்கலா இருக்கும்.

என்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு துருவா முறைப்பையன் என்பதால் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினேன். இதை என் மகளிடம் சொன்னபோது கோபித்துக் கொண்டாள். துருவாவும், நானும் சகோதரன் சகோதரியாக பழகி வருகிறோம். நாங்கள் எப்படி சேர்ந்து நடிக்க முடியும் என்று கூறிவிட்டாள். இந்த காலத்து இளைஞர்கள் எப்படி முற்போக்காக சிந்திக்கிறார்கள் என்று நினைத்து வியந்து போனேன்.

இவ்வாறு அர்ஜுன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !