ஆக்சிஜன் சிலிண்டருக்காக அலைந்தேன் ; கன்னட நடிகர் சாதுகோகிலா வேதனை
ADDED : 1629 days ago
நாடெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை பரவ துவங்கியுள்ளது. கடந்த வருடம் முதல் கட்டத்தை எதிர்கொண்டது போல, தற்போதும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டாலும் கூட, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை என்கிற செய்திகளும் வெளியாகி வருகின்றன. இது உண்மைதான் என, தனது சொந்த அனுபவத்தில் இருந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார் பிரபல கன்னட நடிகரும் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவருமான சாது கோகிலா.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன் எனது சகோதரரின் மகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம்.. ஆனால் பற்றாக்குறை காரணமாக, அவனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உடனடியாக கிடைக்கவில்லை. அதன்பின் நான் அலைந்து திரிந்து ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்பாடு செய்தேன். பிரபலமான எனக்கே இந்த நிலை.. ஆக்சிஜன் சிலிண்டருக்காக மட்டுமல்ல, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் கூட பதிந்து வைத்து மயானங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் தான் நிலவுகிறது” என தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.