நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்
ADDED : 1610 days ago
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா(70) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான பேச்சு வழக்கு உள்ளது. அந்தவகையில் நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெல்லை சிவா. இவரது இயர் பெயர் சிவநாதன் சண்முகவேல் ராமமூர்த்தி. 1952ம் ஆண்டு ஜன., 16ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பணகுடியில் சிறுகிராமத்தில் பிறந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் நாடகங்களிலும், டிவிக்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
நீண்ட போராட்டத்திற்கு பின் ‛ஆண்பாவம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நெல்லை சிவா. தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த அவருக்கு சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த வெற்றிக் கொடிக்கட்டு படம் நல்ல அடையாளம் தந்தது. தொடர்ந்து ரன், சாமி, அருள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நெல்லை தமிழ் கலந்து பேசி காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்தார்.
சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் வசித்து வந்த நெல்லை சிவா இன்று(மே 11) மாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிசடங்கு நாளை நண்பகலில் அவரது சொந்த ஊரிலேயே நடக்கிறது. நெல்லை சிவா திருமணமே செய்யாதவர் ஆவார்.
நடிகர்கள் விவேக், பாண்டு என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.