திண்டுக்கல் மகாகணபதி கோயில் நவமாருதி
திண்டுக்கல் ராம்நகர் பகுதியில், வல்லப மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. மடியில் தேவியை அமர வைத்தபடி, திருமாலிடம் உள்ள சங்கு-சக்கரத்துடன் காட்சி தருகிறார் கணபதி. அருகம்புல், எருக்கம்பூ, வன்னி இலை ஆகியவை கொண்டு இவரை வணங்கினால், எடுத்த காரியம் யாவற்றிலும் வெற்றியைத் தருவார் விநாயகப் பெருமான். இங்கே, சக்கரத்தாழ்வார், சத்யநாராயணர், கேதாரீஸ்வரர், சண்முகர், சந்தான கோபாலன், லட்சுமி ஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சத்யநாராயணா சேவா டிரஸ்ட் எனும் அமைப்பினரால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில், ஒன்பது அனுமனையும் ஒருசேரத் தரிசிக்கலாம். பால மாருதி, யோக மாருதி, தீர மாருதி, பஜனை மாருதி, வீர மாருதி, தியான மாருதி, பக்த மாருதி, பவ்ய மாருதி, சஞ்ஜீவி மாருதி என ஒன்பது ஆஞ்சநேயர்களும் நவக்கிரகங்களைப் போல் நவமாருதிகளாகத் தரிசனம் தருகின்றனர். ஆக, நவமாருதியையும் ஒவ்வொரு கிழமைகளில், அவர்களுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால், எல்லா வளங்களும் பெருகும்.