பக்தி பரவசத்துடன் வீடுகளில் வேல்பூஜை
ADDED :2081 days ago
சூலூர்: சூலூர் வட்டாரத்தில், வீடுகள் தோறும் பக்தி பரவசத்துடன் வேல் பூஜையும், கந்த சஷ்டி கவச பாராயணமும் நடந்தது. சூலூர் வட்டார வேல் வழிபாட்டு குழு, இந்து முன்னணி, பா.ஜ., மற்றும் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து இயக்கங்கள் சார்பில், பல கிராமங்களில் நேற்று முன்தினம் வேல் வழிபாடு நடந்தது. வீடுகள் முன்பாக வேல் மற்றும் மயில் கோலமிட்டு, விளக்கேற்றி, அலங்கரிக்கப்பட்ட முருகப் பெருமான் திருவுருவ படத்துக்கு பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தனர். தொட்டிபாளையம் இளந்தாமரை சேவா சங்கம் சார்பில் நடந்த பூஜையில், முருகப்பெருமான் வேடம் தரித்து குழந்தைகள் பங்கேற்றனர்.