புத்தாண்டு தரிசனம்: மருதமலையில் குவிந்த பக்தர்கள்
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டு தினமான இன்று 4:30 மணிக்கு கோ பூஜை செய்து, நடை திறக்கப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, பால், தயிர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், 5:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரமான, ருத்ராட்சை கவசத்தில், சிவப்பு நிறத்தில் சுப்பிரமணிய சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புத்தாண்டு தினத்தையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்தனர். இதனால், அடிவாரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோவிலுக்குள், முகக்கவசங்கள் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.