ஆரூரா... தியாகேசா கோஷம் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில், ஆழிதேரோட்டம், இன்று‘ஆருரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.
திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. ‘ இக்கோவில் தோன்றிய காலத்தை கூறமுடியாத அளவு பெருமை பெற்றது’ என திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடி; எடை 350 டன். இக்கோவில் தேர், இருபத்தி நான்கரை அடி நீளம், ஒன்றரை அடி உயரம் கொண்ட இரண்டு இரும்பு அச்சுகளில், 9 அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட நான்கு இரும்பு சக்கரங்களின் மேல், கலை சிற்பங்களுடன் அமைந்துள்ளது.
தேரின் முன்புறம்,தேரை இழுப்பதுபோல், நான்கு குதிரை சிலைகள் உள்ளன. ஒவ்வொரு குதிரையும், 32 அடி நீளம்,11 அடி உயரம் கொண்டது. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம். திருச்சி பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமயமாக்கி,‘ ஹைட்ராலிக் பிரேக்’ அமைத்துள்ளது. கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு காரணமாக ஆழித்தேரோட்டம் நடைபெறவில்லை. நடப்பு ஆண்டு, இக்கோவிலில், கடந்த 2ம் தேதி, கொடியேற்றத்துடன், பங்குனி உத்திரவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆழித்தேரோட்டம்; ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழிதேரோட்டம் நடைபெறுவது ஐதீகம். அதன்படி, கடந்த,1990; 1991ம் ஆண்டுகளில், ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின், நடப்பு ஆண்டுதான், ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடக்கிறது. ஆழிதேரோட்டத்தை ஒட்டி, கடந்த 24ம்தேதி இரவு, 11:00 மணிக்கு, தேருக்கு, தியாகராஜசுவாமி எழுந்தருளினார். அன்று இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை,5:00 மணிக்கு,விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை 7:38 மணிக்கு, கலெக்டர் சாந்தா வடம்பிடித்து, ஆழிதேரோட்டத்தை துவக்கிவைத்தார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா... தியாகேசா’ கோஷங்கள் முழங்க, வடம்பிடித்து தேரை இழுத்தனர். தேரின் பின் சக்கரங்கள் புல்டோசர்களால் தள்ளப்பட்டன. ஆடி அசைந்த நிலையில் புறப்பட்ட ஆழித்தேர், பார்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எஸ்.பி.கயல்விழி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.