பக்தர்கள் முககவசம் அணிய வேண்டும்: துணை கமிஷனர்
ADDED :1805 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது: விழாவையொட்டி சொக்கநாதர் கோயில் முன்பு மார்ச் 29 நடக்கும் சூரசம்ஹாரலீலை, மார்ச் 30 பட்டாபிஷேகம், 31ல் திருக்கல்யாணம், ஏப்., 1 தேரோட்டத்தில் பங்கேற்க வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். தேரோட்டத்தன்று காலை கிரிவலப்பாதையில் கிருமிநாசினி தெளிக்கப்படும். பக்தர்கள் அடிக்கடி கை கழுவ பல்வேறு இடங்களில் கிருமினிநாசினி மருந்து வைக்கப்படும். திருக்கல்யாணத்தன்று சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்யும் வகையில் குறைந்தளவில் அனுமதிக்கப்படுவர் என்றார்.