மந்தை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையம் புதூரில் உள்ள மந்தை மாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து, புதிதாக மூலஸ்தானம், விமான கோபுரம், சித்தி விநாயகர், பாலமுருகன், வராகி, மகேஸ்வரி, துர்க்கை மற்றும் அரச மரத்து பிள்ளையார் ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:30 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று காலை விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. மாலையில் முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மந்தை மாரியம்மனுக்கு எந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் அமைத்து, அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், அம்மனுக்கு காப்பு கட்டுதல், தீபாராதனை நடைபெற உள்ளது. காலை, 9:30 மணிக்கு மந்தை மாரியம்மனுக்கும் சித்தி விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது விழாவில் வள்ளிகும்மி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர்கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.