காங்கயம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :1431 days ago
சூலூர்: காங்கயம் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
காங்கயம்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், 200 ஆவண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால், தேர் வெள்ளோட்டம் நடப்பது தாமதமாகி வந்தது. சில நாட்களுக்கு முன், தேர் வெள்ளோட்டம் நடந்தது. இந்நிலையில், கோவில் ஆண்டு விழாவை ஒட்டி தேரோட்டம் நேற்று முன் தினம் நடந்தது. ஸ்ரீ தேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் சென்றது. கோவிந்தா... கோவிந்தா கோஷங்களை பக்தர்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.