மாகாளியம்மனுக்கு பூச்சொறிதல் விழா
ADDED :4903 days ago
ஆண்டிபட்டி:சக்கம்பட்டி நன்மை தருவார் கோயிலில் உள்ள, 49 அடி உயர மாகாளியம்மனுக்கு ஆடி உற்சவத்தை முன்னிட்டு பாலாபிஷேகம், பூச்சொறிதல் விழா நடந்தது.கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கி விழாவில், பக்தர்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று நடந்த விழாவில், அம்மன் தபசு ஹோம பூஜைகள் நடந்தது. அம்மன் கரகம் எடுத்து வந்து, 49 அடி உயர மாகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் 49 அடி உயர சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, மலர்கள் தூவி வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.