சிவாலயபுரத்தில் ஆடி தபசு திருவிழா பக்தர்கள் விரதம் துவக்கம்
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் ஆடி தபசு திருவிழா சிறப்பு பூஜை வழிபாட்டுடன் இன்று துவங்கியது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இன்று ஆடிப் பூரத்தை முன்னிட்டு, மாலை 5.30 மணிக்கு, அருள்மிகு கோமதி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. கோமதி அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தும்பைப்பட்டி சங்கரன் வழி பங்காளிகள் குடும்பத்தினர், மற்றும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம், எள் சாதம் அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று 31.07.2022, ஆடி மாதம் 15-ம் நாள், ஞாயிற்றுக்கிழமை ஆடி தபசு திருவிழா கொடி மரம் நடப்பட்டு, பக்தர்கள் இன்று அதிகாலை அழகர்மலை நூபுர கங்கையில் நீராடி, கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்து, காப்பு கட்டி விரதம் துவங்கினார்கள்.