அழகு நாச்சியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :1253 days ago
அவிநாசி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அவிநாசியில் உள்ள கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள அழகு நாச்சியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் கோவிலில், ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட்டது. மேலும், அழகு நாச்சியம்மன் கோவில் அரங்கத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அப்பகுதி பெண்கள் அம்மன் துதி போற்றி படித்து, 108 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு மலர் மற்றும் வெள்ளி காப்பு அலங்காரத்தில் அழகு நாச்சியம்மன் மற்றும் செல்லாண்டியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு விழா குழுவினர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், குங்குமம், மஞ்சள் சரடு, வெற்றிலை, வளையல் உள்ளிட்டவைகளை வழங்கினர்.