உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் காவிரியில் துலா உற்சவ அமாவாசை தீர்த்தவாரி

மயிலாடுதுறையில் காவிரியில் துலா உற்சவ அமாவாசை தீர்த்தவாரி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று காவிரியில் நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். இன்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு  வதான்யேஸ்வரர் கோவையில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, மற்றும் விஸ்வநாதர் கோவில், ஐயாரப்பர் கோவில் இவற்றிலிருந்து சுவாமி அம்பாளுடன் காவிரிக்கரையின் 2 கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரண்டு கரைகளிலும் எழுந்தருளிய சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு  தீபாராதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !