உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

வைத்தியநாத சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்-  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில்  செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர்,  செல்வமுத்துக் குமாரசாமி, தன்வந்திரி உள்ளிட்டோர் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன.  இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாத உற்சவம் நடைபெறும் வழக்கம், அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம்  நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விநாயகர், செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் நான்கு தேர்களில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை திருநாவுக்கரசு  தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 4 தேர்களையும் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீர்காழி டிஎஸ்பி. லாமேக் தலைமையிலான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு விழா முடிந்த உடன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !