உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்திமான வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. மாலை பெருமாள் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். இதேபோல் தினமும் காலை பெருமாள் பல்வேறு லீலைகளில் பல்லக்கில் ரத வீதிகளில் வலம் வருவார். மாலை சிம்மம், சேஷ, கருடன், அனுமன், யானை, குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வர உள்ளார். மே 30 காலை 11:00 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி தயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை பூ பல்லக்கிலும், மே 31 காலை வெண்ணைத்தாழி நவநீதகிருஷ்ணன் சேவை, இரவு திருமங்கை ஆழ்வார் மோட்சம் நடக்கிறது. ஜூன் 1 மாலை 4:30 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். தொடர்ந்து மே 3 காலை 10:30 மணிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். மேலும் காலை 10:00 மணிக்கு குதிரை வாகன சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !