ஆனி பவுர்ணமி; திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு இன்று பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். கோயிலில் பொதுவாக திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருவர்.
இன்று பவுர்ணமியும் வந்ததால் வழக்கத்தை காட்டிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். 2 மணி நேரம் காத்திருப்பு: பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் சமயங்களில் மூலஸ்தானத்தில் கட்டண தரிசன பக்தர்களுக்கு ஒரு வரிசையும், கட்டணமில்லா தரிசன பக்தர்களுக்கு ஒரு வரிசையிலும் அனுப்பப்படுகின்றனர். கூட்டம் அதிகம் உள்ள காலங்களில் மூலஸ்தானத்தில் இலவச தரிசன பக்தர்கள் மூன்று வரிசையாக அனுப்பப்படுகின்றனர். சமீப காலமாக கோயில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மூலஸ்தானத்தில் சாதாரண தரிசன பக்தர்கள் ஒரு வரிசையிலேயே அனுப்பப்படுகின்றனர். இன்று கூட்டம் அதிக அளவில் இருந்த பொழுதும் இலவச தரிசன பக்தர்கள் ஒரு வரிசையில் மட்டுமே அனுப்பப்பட்டனர். இதனால் இலவச தரிசன பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருக்கும் காலங்களில் இலவச தரிசன பக்தர்களுக்கு மூன்று வரிசையாக அனுப்ப நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.