பூமாரியம்மன் கோயில் பால்குட விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பரமக்குடி; பரமக்குடி அருகே லெட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பூமாரியம்மன் கோயில், 15வது ஆண்டு அக்னி சட்டி, பால்குடம், பொங்கல் விழா நடந்தது. இக்கோயிலில் ஆக., 20 மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். பின்னர் தினமும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆக., 26 மாலை 5:00 மணி முதல் அக்னி சட்டி, பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மன் பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டார்.ஆக., 27 காலை 5:00 மணி தொடங்கி பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், கரகம் மற்றும் வேல் குத்தி ஊர்வலமாக வந்தனர். காலை 10:00 மணிக்கு மேல் பூமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.