பெருமாநல்லூரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் திருகல்யாணம் கோலாகலம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இரு கோவில்களின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 28 ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, மண்டல பூஜை தினசரி நடைப்பெற்று வந்தது. அதன் நிறைவு நாள் பூஜை நேற்று நடைபெற்றது. பூஜையையொட்டி, காலை விநாயகர் வழிபாடு, தொடர்ந்து, கலசங்கள் ஆலய வலம் வருதல், மூலவருக்கு திரவிய அபிஷேகம், சுவாமி மற்றும் அம்பிகைக்கு 108 சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் மஹா தீபிராதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் நூற்று கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தர்சித்தனர்.