நவராத்திரி விழா நிறைவு ; துர்கா சிலைகள் கடலில் கரைப்பு
ADDED :364 days ago
நீலாங்கரை; வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை போல், நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை நடத்தப்படும். அந்த வகையில் சென்னையில் சவுகார்பேட்டை, வேப்பேரி, மாம்பலம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், துர்கா சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்ட நிலையில், விஜயதசமி நாளான நேற்று, ஒன்பது நாட்கள் வழிபாடு முடிந்த துர்கா சிலைகள், ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் வண்ணம் பூசிக் கொண்டு, உற்சாகமாக நடனமாடிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் கடலில், 3 முதல் 6 அடி உயரம் கொண்ட, ஆறு சிலைகள் கரைக்கப்பட்டன. இதேபோல, மெரினா கடலிலும் துர்கா சிலைகள் கரைக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.