உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பயன்படுத்தப்படும் பூக்கள்; கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் பயன்படுத்தப்படும் பூக்கள்; கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை; சபரிமலையில் அலங்காரத்துக்காக பாரம்பரியமற்ற பூக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில் சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகளில் கூறியுள்ளதாவது: சபரிமலையில் கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல பூஜை மகர விளக்கு திருவிழா போன்ற நாட்களில் கோயில் சுற்றுப்புறங்களை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகிறது இவை பெரும்பாலும் ஆர்கிட் வகையைச் சார்ந்தது. இது நீண்ட நேரம் வாடாமல் இருப்பதால் அலங்கார குத்தகை எடுப்பவர்கள் இந்த பூக்களை பயன்படுத்துகின்றனர். வரும் நாட்களில் இது போன்ற பூக்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதையும், ஐதீக முறைப் படியான பூக்கள் பயன்படுத்துவதையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுதி செய்ய வேண்டும்.


வழிபாடு பிரசாதமான அப்பம் மற்றும் அரவணை விற்பனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுஅதிகாரியை கட்சி சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள் அப்பத்திலும் அரவணையிலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர். சபரிமலையில் மரக் கிளை உடைந்து விழுந்து கர்நாடகாவை சேர்ந்த சஞ்சு என்ற பக்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோட்டயம் மாவட்ட மருத்துவ அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பம்பை ஹில்டாப் பார்க்கிங்கில் பத்துக்கு மேற்பட்ட கேரள அரசு பஸ்களை ஒரே சமயத்தில் நிறுத்தக்கூடாது. இதை பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் அதிகாரி உறுதி செய்ய வேண்டும். பக்தர்களின் கார்கள் 24 மணி நேரத்துக்கு அதிகமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்க கூடாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !