சபரிமலை சன்னிதானத்தில் கற்பூர ஆழி பவனி; பக்தர்கள் பரவசம்
ADDED :455 days ago
சபரிமலை: மண்டல காலம் நிறைவு பெறுவதை ஒட்டி நேற்று மாலை தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பில் சன்னிதானத்தில் கற்பூர ஆழி பவனி நடைபெற்றது.
சபரிமலை சன்னிதானத்தில் பணி புரியும் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில் வழிபாடாக இந்த பவனி நடத்தப்படுகிறது. வட்ட வடிவமான பாத்திரத்தில் கற்பூரம் குவித்து வைத்து அதில் தந்திரி, மேல்சாந்தி, நம்பூதிரி ஆகியோர் தீபம் ஏற்றினர். தொடர்ந்து இரண்டு ஊழியர்கள் இரண்டு பக்கமும் அந்தப் பாத்திரத்தை அசைத்து அசைத்து சென்றபோது கற்பூரத்தில் இருந்து எரியும் தீபம் மேல்நோக்கி எழுந்தது. இந்த பவனியின் முன்புறம் ஐயப்பன் புலி மேல் அமர்ந்து வருவது போன்று வாகனம் எடுத்து வரப்பட்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், கணபதி போன்ற வேடமிட்டவர்களும் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் சரண கோஷம் முழக்கியபடி இந்த பவனியில் கலந்து கொண்டனர்.