திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி : அலுவலர் விடுமுறையால் பாதிப்பு
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மூலவர் அஷ்டாங்க விமானத்தில் தங்கத் தகடு ஒட்டும் திருப்பணி அறநிலையத்துறை துணை ஆணையர் விடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வரலாறு,புராணச் சிறப்பு மிக்க அஷ்டாங்க விமானம் புகழ் பெற்றது. இந்த மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு திருப்பணியை முன்னிட்டு கடந்த நவ. 14 ல் தங்கத் தகடு ஓட்டும் பணி துவங்கியது. விமானத்தின் மூன்று நிலைகளில் முதல்நிலைக்கு தங்கத் தகடு ஒட்டும் பணி துவங்கியது. விமானதிற்கு செப்புக் கவசம் தயாரிக்கப்பட்டு அதற்கான நகாசு வேலைகள் நடந்து வருகிறது. அதற்கு ஒட்டுவதற்கு தங்கத்தகடு தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்துள்ளது. இந்நிலையில் இப்பணிகளை கண்காணிக்கும் அறநிலையத்துறை துணை ஆணையர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் தங்கத் தகடு ஒட்டும் பணி பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மாற்று பணியாக துணை ஆணையர் நியமிக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.