திருமலை திருப்பதிக்கு ‘ஆன்லைன்’ டிக்கெட் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்ட ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் சாலை தெருவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் மற்றும் விருந்தினர் இல்லத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்வதற்காக, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையம் இயங்கி வந்தது.
ரூ.300 கட்டணம்: இங்கு, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய, 300 ரூபாய் கட்டணத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, முன்பதிவு மையம் மூடப்பட்டது. கொரோனா ஊரடங்கில் முற்றிலும் தளர்வு ஏற்படுத்தி, இயல்பு நிலை திரும்பி ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையத்தில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் மையம் மீண்டும் திறக்கப்படாமல் உள்ளது.
‘நெட்வொர்க்’ பிரச்னை: இதனால், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், தனியாரிடம் கூடுதல் பணம் செலவழித்து முன்பதிவு செய்தாலும், ‘நெட்வொர்க்’ பிரச்னை காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், சிறப்பு தரிசனத்திற்கான ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் மையத்தை மீண்டும் திறக்க, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.