உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகர் சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகர் சிற்பம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், சமண சமயத்தின் அருகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் ஒன்றியம், அனக்காவூர் ஏரியில், நீரில் மூழ்கிய நிலையில் இருந்த அருகர் சிற்பத்தை, அகிம்சை நடை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதரன் அப்பாண்டைராஜ் அடையாளப்படுத்தி உள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: அனக்காவூர் கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியான இது, ஐந்தாண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டபோது, பீடத்துடன் கூடிய ஒரு சிற்பம் கிடைத்துள்ளது. அது, கரையில் வைக்கப்பட்ட நிலையில், மண் கரைந்ததால் ஏரிக்குள் நழுவிச் சென்றுள்ளது. தற்போது, தண்ணீர் கொஞ்சம் வற்றியுள்ளதால், சிற்பம் வெளியில் தெரிகிறது. அதன் மேற்புறம் பாசி படர்ந்து காய்ந்துள்ளது. இது, உள்ளூர் மக்களால் எல்லைச்சாமி, நொண்டிச்சாமி, வெள்ளாயச்சாமி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் தன்மையை ஆராய்ந்தபோது, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கலை பாணியில் அமைக்கப்பட்ட அருகர் சிற்பம் என்பது தெளிவாகிறது. அருகர் என்பவர், தமிழ் சமண சமயத்தில் முதன்மையானவராக கருதப்பட்டவர். பின், ஜெயின் சமயத்துடன் இணைக்கப்பட்டு தீர்த்தங்கரராக பாவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.   – நமது நிருபர் –


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !