திருமலை சேதுபதி கல்வெட்டு திருவாடானையில் கண்டெடுப்பு
திருவாடானை; திருவாடானை அருகே கட்டுகுடியில், 368 ஆண்டுகள் பழமையான திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கட்டுகுடியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பழனியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தகவலில், கைக்கோளர் ஊருணியின் வடமேற்கில், இரண்டாக உடைந்த ஒரு கல் துாணில் இருந்த கல்வெட்டை, தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, படியெடுத்து படித்து ஆய்வு செய்தார்.
ராஜகுரு கூறியதாவது: கல் துாண் மேற்பகுதியில், திரிசூலம், அதன் கீழே, 24 வரிகள் கொண்டதாக உள்ளது. இதில், சக ஆண்டு, 1579, தமிழ் ஆண்டு யேவிளம்பி, சித்திரை மாதத்தில் சுக்கிரவாரமும், புனர்பூசமும், சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில், ரெகுநாத திருமலை சேதுபதி காத்த தேவருக்கு புண்ணியமாக, திருவாடானை ஆடானை நாயகர் கோவில் திருநந்தவனத்துக்காக கட்டுகுடியில் விரைப்பாடாக, 50 கலம் மன்னரால் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைப்பதற்கு தேவைப்படும் நில அளவையை விரைப்பாடு என்பர். இதில், 50 கலம் தானியங்களை விதைப்பதற்கு தேவைப்படும் நில அளவு, நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தானத்தை சந்திர, சூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்து கொள்ள மன்னர் கட்டளையிட்டுள்ளார். இந்த புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கை கரையிலே, காராம் பசுவை கொன்ற பாவத்திலே போவானாகவும் என கல்வெட்டு எச்சரிக்கிறது. இதில் கலம் என்பது ‘ள’ என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னர் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆங்கில ஆண்டு கி.பி., 1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.