உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடியில் புதுப்பிக்கப்பட்ட பழமையான பள்ளிவாசல்; சிறப்பு துவாவுடன் துவக்கம்

ஏர்வாடியில் புதுப்பிக்கப்பட்ட பழமையான பள்ளிவாசல்; சிறப்பு துவாவுடன் துவக்கம்

கீழக்கரை; ஏர்வாடியில் அல் மஸ்ஜிதுல் ஜாமியா குத்பா பள்ளிவாசல் தமிழகத்தில் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.


தமிழகத்தின் ஆரம்ப கால முதல் 10 பள்ளிவாசல்களில், ஏர்வாடியில் உள்ள இந்த பள்ளிவாசலும் அடங்கும். இந்த பள்ளிவாசலின் பழமையும் புரதான சிறப்பும் மாறாமல் புதுப்பித்து பள்ளிவாசல் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. நேற்று காலை 11:00 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் இமாம் ஜாபர் சாதிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமிழக அரசின் மாவட்ட காஜி சலாஹுதீன் ஆலிம் சிறப்புரையாற்றி பயான் என்னும் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பள்ளிவாசலின் தலைமை இமாம் ரியாஸ் மவுலவி, பாரத தேசத்தின் வளர்ச்சிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஊர் மக்களின் நலனுக்காகவும், முன்னோர்களின் மறுமை வாழ்வு சிறப்பிக்கவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை பள்ளிவாசலின் முத்தவல்லி அம்ஜத் ஹுஸைன், செயலாளர் செய்யது ஹாஜி உசேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் அகமது இப்ராஹிம், செயலாளர் ஜாகிர் உசேன், உதவி தலைவர் முகம்மது சுல்தான் மற்றும் ஏராளமான ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !