காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் ஜென்ம நட்சத்திரமான, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அனைத்து வைணவ திருத்தலங்களிலும், திருமங்கை ஆழ்வார் வைபவம் சிறப்பாக நடைபெறும். காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவத்தில் அதிகாலை மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து, திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்தி, ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியா வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. பின்பு வெள்ளி சப்பரத்தில் வெண் பட்டுக்குடை சூழ, மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் அரங்கநாத பெருமாள் முன், திருமங்கையாழ்வார் வீற்றிருந்தார். அங்கு அவருக்கு மாலை, பரிவட்டம், சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் சடாரி மரியாதை பெற்று ராமானுஜர் சன்னதியை அடைந்தார். உச்சிக்கால பூஜை, சாற்று முறையை அடுத்து, மகா தீபாராதனை நடந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.