குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலம்
மயிலாடுதுறை: குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில், நேற்று கடை ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை, குத்தாலம் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நேற்று மதியம் நடந்தது. இதை முன்னிட்டு, அரும்பன்ன வனமுலை நாயகி சமேத உக்தவேதீஸ்வரர், ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஓம் காளீஸ்வரர், ஆதிசக்தி அம்பாள் சமேத மன்மதீஸ்வரர் உட்பட ஆறு கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருளல் நடந்தது. அங்கு, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து அஸ்திர தேவர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் கொடுக்க, தருமபுரம் ஆதீனம் உட்பட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.