உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலையில் மலையேற துவங்கிய பக்தர்கள்

தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலையில் மலையேற துவங்கிய பக்தர்கள்

தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் மலையேற துவங்கினர்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். இந்தாண்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முதல் பக்தர் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்தனர். இதனையடுத்து, நேற்றுமுன்தினம் மாலை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், இந்தாண்டு மலையேறும் பக்தர்களுக்கு, எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என, சாதுக்கள், படி பூஜை செய்தனர். தொடர்ந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு, வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதையின் கேட்டை, போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன் திறந்து வைத்தார். இதனையடுத்து, நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மலையேற துவங்கினர்.


கோவில் நிர்வாகம் சார்பில், அடிவாரத்தில் உள்ள கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில், பக்தர்களுக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தியுள்ளனர். சுகாதாரத்துறையினர், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ முகாம் அமைத்துள்ளனர். மலையேறும் பக்தர்கள், வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் கொண்டு செல்லாமல் இருக்க, அடிவாரத்தில், வனத்துறையினர் மலையேறும் பக்தர்களின் உடமைகளை சோதனை செய்த பின்பே மலையேற அனுமதிக்கின்றனர். மலையேறும் பக்தர்கள், தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசாமல் தடுக்க, பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில், ஸ்டிக்கர் ஒட்டி, 20 ரூபாய் முன் பணமாக பெற்று வருகின்றனர். தரிசனம் முடித்து கீழே வரும் பக்தர்கள், ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை, வனத்துறையினரிடம் ஒப்படைத்த பின்பு, பக்தர்களுக்கு, முன் பணமாக பெறப்பட்ட, 20 ரூபாயை ஒப்படைக்கின்றனர். கடந்தாண்டுகளை போல, உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க, விழிப்புணர்வு பிளக்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது. நேற்று, ஏராளாமான பக்தர்கள் மலையேறினர். இந்நிலையில், அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில், அறங்காவலர் குழு தலைவர் சிவகணேஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தக்கூடாது. மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !