கைலாசநாதர் கோயில்களில் சிவராத்திரி நள்ளிரவு பூஜை
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு 8:00 மணி முதல் நேற்று அதிகாலை 4:30 மணி வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி பத்திரகாளி அம்மன், கருப்பணசுவாமி கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டாளர்கள் கோயிலின் முன்பு நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நள்ளிரவு 12:00 மணிக்கு, 11 வகையான அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி பொய்யாமொழி அம்மன் கோயில் சிவராத்திரி விழாவில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் இரவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை வாணியக்குடி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.