உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மன்னார்குடி ஜீயர் தரிசனம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மன்னார்குடி ஜீயர் தரிசனம்

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு மன்னார்குடி ஜீயர் செண்டை அலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வருகை புரிந்தார். 


கோயில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி ஆகியோர் மன்னார்குடி ஜீயர் சுவாமிகளை வரவேற்றனர்.  கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  நமது தேசத்தின் ஆன்மீக அடையாளங்களாக கோயில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை கோயிலை மையப்படுத்தி நடத்துவது நமது பண்பாடாகும். திருக்கடையூர் கோயிலில் மணிவிழா, சதய விழா திருமணங்கள் என்றில்லாமல் தற்போது அனைத்து மங்கள நிகழ்ச்சிகளையும் நடத்த பக்தர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோயில்களை மிகவும் தூய்மையாக பராமரிப்பதோடு, வழிபாடுகள் குறைவின்றி நடைபெற வேண்டியது அவசியம்.  வளரும் தலைமுறைக்கு நமது பண்பாடு கலாச்சாரங்களை போதிக்க வேண்டியது தற்போது மிக அவசியமாக உள்ளது. இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்து கோயில்களின் சொத்துக்கள் காக்கப்பட வேண்டும். இந்து விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்து கோயில்களின் சொத்துக்கள் வழக்கு என்ற அடிப்படையில் செலவு செய்வதை ஏற்க முடியாது. அது வேதனை அளிக்கக்கூடியது. இது தவிர்க்கப்பட வேண்டும்.


ஒவ்வொரு கோயிலுக்கும் அதிகளவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி என பல முக்கிய கோயில்களில் பக்தர்கள் வரக்கூடிய வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒவ்வொரு கோயிலிலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக உரிய இடத்தினை தனியாக அமைத்து தர முன்வர வேண்டும். கும்பகோணம் மகாமக விழா 2028 நாடு முழுவதும் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !