உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவை மறந்தவனுக்கு எப்பயனும் இல்லை

குருவை மறந்தவனுக்கு எப்பயனும் இல்லை

மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என மதுரையில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் சூரியனார் கோயில் ஆதின தேசிக மஹா சுவாமிகள் பேசினார்.


மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் வளாகத்தில் எண்மர் போற்றும் எண் குணத்தான் எனும் இசையரங்கம், உரையரங்கம் நடந்தது. நேற்று மீளா அடிமை உமக்கே ஆனாய் எனும் தலைப்பில் சூரியனார் கோயில் ஆதின தேசிக மஹா சுவாமிகள் இசை அருளுரை வழங்கினார்.


அவர் பேசியதாவது: பாண்டிய மன்னனுக்கு மதுரையின் எல்லை குறித்து தெரியவில்லை. சொக்கநாதரிடம் வேண்டிய போது, சொக்கன் அவரது அணிகலனாகிய வாசுகி பாம்பு (ஆலம்) தனது வாலை வாயால் கவ்வி வட்டமிட்டு மதுரையின் எல்லையைக் காட்டியதால் இத்தலத்திற்கு ஆலவாய் எனப் பெயர் ஏற்பட்டது. இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலப் பெயராகவும் விளங்குகிறது.


புண்ணியம் வைராக்கியம் உள்ளவர்கள் கோபத்தில் எடுக்கும் சத்தியம் பலிக்கும். திருஞானசம்பந்தரை 12 வயதில் சமணர்கள் அழிக்க சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் அவரோ, சொக்கன் என்னை காப்பாற்றுவார் என உறுதியாக நம்பினார். அவரின் கோபம் தான் எதிரிகளை அழித்தது. ஆழமாக கடவுளை நம்பினால் மட்டுமே இறையருள் கிடைக்கும்.


ரிக் வேதத்தில் இரண்டு ஸ்வரங்களாக வரும், இதை தமிழில் புகுத்தியவர் திருஞானசம்பந்தர். மூவர் தேவாரம் முழுவதும் பாடினால், ஐந்து ஆண்டுகளாகும். ஒருவன் தன் குருநாதரை மறந்து விட்டால், என்ன செய்தாலும் அவன் வாழ்வில் ஒரு பயனும் கிடைக்காது. குருவை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும் இவ்வாறு பேசினார்.


இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நேற்றுடன் நிறைவடைந்தது. ஏற்பாடுகளை சிருங்கேரி சாரதா பீடம் நிர்வாகிகள் செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !