உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு வழிபாடுகள் உள்ள சசிஹித்லு பகவதி கோவில்

சிறப்பு வழிபாடுகள் உள்ள சசிஹித்லு பகவதி கோவில்

கேரளாவில் உள்ள பகவதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோன்று, கர்நாடகாவின் மங்களூரிலும், இத்தகைய பகவதி கோவில் உள்ளது. சிறப்பான வழிபாடுகளால், மக்களை சுண்டி இழுக்கிறது.


தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு தாலுகா, சசிஹித்லு கிராமத்தில் ஸ்ரீபகவதி கோவில் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த திருத்தலமாக இது விளங்குகிறது. பொதுவாக கோவில்களில் பிரதட்சணம் செய்யும் பாதை, கல் அல்லது டைல்ஸ்களால் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சசிஹித்லு பகவதி கோவிலை சுற்றிலும், மணல் பரப்பப்பட்டுள்ளது. பகவதி அம்மன் தன்னை சுற்றிலும், மணலே இருக்க வேண்டும் என, விரும்புவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.


கோவிலில் பல மேம்பாட்டு பணிகள் நடந்தாலும், சுற்றிலும் உள்ள மணல் அப்படியே இருக்க வேண்டும். மாற்றக்கூடாது என்பது, முக்கியமான சம்பிரதாயமாகும். பக்தர்கள் மணலில் நடந்து, பிரதட்சணம் செய்ய வேண்டும். பகவதி அம்மன் கடல் வழியாக நடந்து, இந்த பகுதிக்கு வந்து நிலைத்து நின்றதாக புராணங்கள் கூறுகின்றன. கடற்கரை மணல் என்றால் அம்மனுக்கு மிகவும் விருப்பம் என, பக்தர்கள் நம்புவதால், கோவிலை சுற்றிலும் உள்ள மணலை தக்க வைத்துக் கொள்கின்றனர்.


பக்தர்கள் மணலில் தான், பிரதட்சணம் செய்ய வேண்டும். கோடைக்காலத்தில் மணல் சூடாக இருக்கும். நடப்பது கஷ்டம். எனவே சமீபத்தில் கோவிலை சுற்றிலும், பிரதட்சணம் செய்யும் பாதையின் மேற்பகுதியில் கூரை வசதி செய்யப்பட்டுள்ளது. சசிஹித்லு பகவதி கோவில், 900 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். சிவனின் அங்கத்தில் இருந்து உருவான பத்ரகாளியின் அவதாரமே, பகவதியாக பூஜிக்கப்படுகிறார். தாரகாசுரா என்ற ராட்சதனை சம்ஹாரம் செய்ய, பகவதி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தென்னகத்தில் சேரர், பாண்டியர், பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்திலேயே, இந்த புண்ணிய தலம் பிரசித்தி பெற்றிருந்தது. கடந்த, 1305ம் ஆண்டில், நந்தனேஸ்வர கோவிலின் சாசனத்தில், சசிஹித்லு உட்பட கடலோர பகுதியின் சில திருத்தலங்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 


சசிஹித்லு பகவதி கோவிலின் தலைமை அர்ச்சகர் சீனிவாஸ் கூறியதாவது:


சசிஹித்லு பகவதி திருத்தலம், கடற்கரையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அம்பாள் கடல் வழியாக வந்து, இங்கு குடி கொண்டதாக ஐதீகம். எனவே அம்பாளை சுற்றிலும் மணலை பரப்பப்பட்டது. பக்தர்கள் மணலில் பிரதட்சணம் செய்வது, பல காலமாக நடந்து வரும் சம்பிரதாயம்.

கேரளாவின் கொடங்கல்லுார் பகுதியில் இருந்து ஆரம்பமான தேவியின் வழிபாடு, மங்களூரின் சசிஹித்லு பகுதிக்கு வந்ததாக, புரானங்கள் கூறுகின்றன. அந்த சம்பிரதாயத்தை நாங்கள் காப்பாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !