உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதாசிவ தேவராயர் கல்வெட்டு செஞ்சி அருகே கண்டெடுப்பு

சதாசிவ தேவராயர் கல்வெட்டு செஞ்சி அருகே கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை, சிட்டாம்பூண்டியை சேர்ந்த ஆசிரியர்கள் முனுசாமி, வடிவேலு ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இது குறித்து தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தமிழக தொல்லியல் துறை சார்பில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு, கல்வெட்டுகளை படிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியில் சேர்ந்து, எங்களிடம் பயிற்சி பெற்ற ஆசிரியர் வடிவேலு, சமீபத்தில் அவரது ஊரில் கள ஆய்வு செய்துள்ளார். அப்போது, லட்சுமணன் என்பவரின் நிலம் அருகில், ஒரு கல் நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்து, அதை ஆய்வு செய்தார். அதில், 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் எழுத்துக்கள் இருப்பதை அறிந்து, அதன் மைப்படியை எனக்கு அனுப்பி வைத்தனர். அதை படித்து தகவல் அனுப்பினேன். அதன்படி, கடந்த 1550ல் வெட்டப்பட்ட கல்வெட்டில், தமிழ் ஆண்டான சாதாரண ஆண்டு, கார்த்திகை மாதத்தில், இது வெட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில், திம்மப்ப நாயக்கர், மடாதிபதி ஒருவருக்கு மடம் ஏற்படுத்தி, நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்.  அந்த நிலத்துக்கு கேடு விளைவிப்போர், கங்கையில் காராம்பசுவை கொன்ற பாவத்தை அனுபவிப்பர் என கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் முடிவில், சிவலிங்கம், திரிசூலம் கோட்டு உருவங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அதனால், இது, சைவ மடம் உருவாக்கி, நிலதானம் செய்ததை உறுதி செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  – நமது நிருபர் –


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !