பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு கூண்டு அமைக்க கோரிக்கை
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச் சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 69 லட்சம் ரூபாய் மதிப்பில், 31 அடி உயரம் ஏழு நிலை உடைய புதிய தேர், ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது.
இந்த தேரில், பெருமாளின் தசாவதாரம் மற்றும் திருக்கச்சி நம்பிகளின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, 70 ஆண்டுகளுக்கு பின், தேர் திருவிழா கடந்த பிப்., 25ம் தேதி நடந்தது. இதையடுத்து, கோவில் முன், சாலையோரம் தேர் நிறுத்தப்பட்டு, துாசு படியாமல் இருக்க தார்பாயால் மூடப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ளதால், தேரை பாதுக்காக்க கூண்டு அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘தேர் சாலையோரம் பாதுகாப்பில்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்பதால், வேட்பாளர்களை வரவேற்று பட்டாசுகள் வெடி க்கப்படும். பட்டாசு தீ பொறியால் தேருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே, தேரை பாதுகாக்க கூண்டு அமைக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘தேர் கூண்டு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில், கூண்டு அமைக்கும் பணிகள் துவங்கப்படும் ’ என்றனர்.