உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி விழா

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி விழா

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி விழா, நேற்று நடந்தது.


மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தெலுங்கு வருடப்பிறப்பு தினமான யுகாதி பண்டிகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளாருக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளாருக்கு, சிறப்பு பூஜைகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார், செய்தார். தொடர்ந்து, யுகாதி பண்டிகையையொட்டி, செவ்வாடை பக்தர்களுக்கு, வெல்லம், வேப்பம் பூ, ஆகியவற்றால் செய்த யுகாதி பச்சடியை வழங்கினர். அடிகளாரின் பாதுகைக்கு பாத பூஜை செய்தனர். அதன்பின், உலக நண்மைக்காக அடிகளார் தங்கதேர் பவனி, சித்தர் பீடத்தில் நடந்தது. இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், ஸ்ரீதேவி உள்ளிட்ட ஏராளமான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். செவ்வாடை பக்தர்களுக்கு, அன்னாதானம், பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநில நிர்வாகிகள் கங்காதரன், சுரேஷ் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !