15ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் ஸ்ரீபெரும்புதுாரில் கண்டெடுப்பு
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக நடப்படுவது, சதிகல் எனும் நினைவுச் சின்னம்.
அப்படி ஒரு சதிக்கல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மேட்டுப்பாளையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீரா ஜான்சினி என்பவர் அளித்த தகவலின் அடிப் படையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் அன்பழகன், அப்பகுதியில் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.
இது குறித்து வரலாற்று ஆய்வாளர் அன்பழகன் கூறியதாவது: மேட்டுப்பாளையம் ஊருக்கு வெளியே உயரமான கான்கிரீட் தளத்தின் மீது பாதியளவு பதிக்கப்பட்ட நிலையில் 38 செ.மீ., உயரம், 43 செ.மீ., அகலத்தில் சதிகல் சிற்பம் உள்ளது. இப்பகுதி மக்களால் தீப்பாய்ந்த அம்மனாக இச்சதிகல் சிற்பம் அறியப்படுகிறது. இச்சதிகல் சிற்பத்தில் உள்ள ஆண் நேர்நிலையில் நின்றிருக்க, அவரது வலதுகை போர்வாள் ஒன்றை தரையில் ஊன்றிய நிலையில் உள்ளது. இடதுகை, இடை யிலிருந்து மேல்பகுதி வழியாக சுற்றிவரும் ஆடையை தாங்கியுள்ளது. இவரின் உருவம், சிற்றரசர் அல்லது தலைவர் போல உள்ளது. இவரின் இடது புறத்தில் நின்றிருக்கும் அவரது மனைவியின் இடதுகை கீழே தொங்கவிட்டிருக்கும் நிலையில், அவரது வலதுகை மேலேந்திய நிலையில் கையில் வைத்துள்ள பொருள் சிதைந்துள்ளது. அடையாளம் காணமுடியாத அளவுக்கு இச் சதிகல் முழுதும் மழுங்கியுள்ளது. கல்வெட்டு எழுத்துக்கள் எதுவுமற்ற இச்சிற்பத்தின் காலம், கி.பி., 15ம் நுாற்றாண்டாக இருக்கலாம். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் இதை உறுதி செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.