திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப். 4ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
கொடியேற்றம்: இன்று காலை பல்லக்கில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது. காலை 6:30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் காலை 6:55 மணிக்கு பங்குனி திருவிழாவிற்கான கொடியேறினர். கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் அரங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் ஞானசேகரன், தி.மு.க., வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி, கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
சுவாமி புறப்பாடு: திருவிழா நடைபெறும் ஏப். 6வரை காலையில் தங்க சப்பரம், தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், வெள்ளி ஆட்டுக் கிடாய், அன்னம், சேஷம், வெள்ளி யானை, பச்சை குதிரை வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர்.
திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 28 இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு நக்கீர வீலை நிகழ்ச்சியும், மார்ச் 29ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, மார்ச் 30 காலையில் கங்காளநாதர், இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நடராஜர், சிவகாமி அம்பாள் புறப்பாடு, ஏப். 1ல் பங்குனி உத்திரம், ஏப். 2ல் சூரசம்ஹார லீலை நடக்கிறது,ஏப். 3ல் பட்டாபிஷேகம், ஏப். 4ல் திருக்கல்யாணம், ஏப். 5ல் தேரோட்டம், ஏப். 6ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.