உத்தரகோசமங்கையில் கோலாகலமாக நடந்த வருடாபிஷேக விழா
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வருடாபிஷேக விழா நேற்று துவங்கி இன்று காலை 11:30 மணிக்கு நிறைவடைந்தது.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2025 ஏப்., 4ல் கும்பாபிஷேகம் நடந்தது. நட்சத்திரப்படி ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு கல் தேர் மண்டபம் அருகே உள்ள அலங்கார பந்தலில் விநாயகர், முருகன், மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மாணிக்கவாசகர், சகஸ்ர லிங்கம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஹோம வேள்வி வளர்க்கப்பட்டது. குடங்களில் புனித நீர் ஊற்றி வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. பூஜைகளை கோயில் பரம்பரை ஸ்தானிக சிவாச்சாரியார்கள் குழுவாக இயங்கி நடத்தினர். பின்னர் மூலவர் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியில் காலை 9:18 மணிக்கு வருடாபிஷேகமும், 18 வகையான திரவங்களால் அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், ராணி அபர்ணா, திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சங்கர் உள்ளிட்ட சமஸ்தான நிர்வாகத்தினர், பக்தர்கள், அலுவலகப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கயிலாய வாத்தியம் இசைக்கப்பட்டு தேவாரம், சிவபுராணம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன.