உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு மாந்தீஸ்வரர் பூஜைக்கு குவிந்த பக்தர்கள்: சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி

திருவாலங்காடு மாந்தீஸ்வரர் பூஜைக்கு குவிந்த பக்தர்கள்: சாலையில் நிறுத்தும் வாகனங்களால் அவதி

திருவாலங்காடு: திருவாலங்காடில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு காரில் வரும் பக்தர்கள். தங்கள் வாகனங்களை 16 கால் மண்டபம், சன்னிதி தெரு, தெற்குமாட வீதியில் நிறுத்துவதால், இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தினமும் 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில், காலை 6-:00 மணி –-- மதியம் 12:00 மணி வரை, மூன்று குழுக்களாக 200 பக்தர்கள் பூஜையில் பங்கேற்று வருகின்றனர். இதற்கு கட்டணமாக, 1,600 ரூபாயை கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து காரில் வருகின்றனர். அவர்கள் தங்கள் காரை சன்னிதி தெருவில் உள்ள 16 கால் மண்டபம் மற்றும் தெற்கு மாட வீதி, வடக்கு மாட வீதியில் நிறுத்தி செல்கின்றனர். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கோவிலுக்கு காரில் வரும் பக்தர்களின் நலன் கருதி, ‘பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !