உத்தரகோசமங்கையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உற்ஸவமூர்த்திகளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள திருக்கல்யாண மண்டபத்தின் முன்புறமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தின் பீடத்திற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் கொடி பட்டம் ஏற்றப்பட்டு தர்ப்பைப் புற்கள், வஸ்திரம் உள்ளிட்டவைகள் சுற்றிலும் கட்டப்பட்டது. காலைவேளைகளில் உற்ஸவமூர்த்திகள் பல்லக்கிலும், இரவில் பேச்சி, சிம்மம், சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், தாமரை உள்ளிட்ட வாகன சேவைகள் நடக்கிறது. நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடக்கிறது. வருகிற ஏப்., 30 அன்று மாலை 4:30 மணிக்கு உற்ஸவ மூர்த்திகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.