சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலம்
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. தேவாரம் பாடல் பெற்ற மலைக்கோவிலான இங்கு சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இங்கு காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இங்கு திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் சுக்கிர வார பூஜையில் கலந்து கொண்டு சட்டை நாதரையும், அஷ்டமியில் அஷ்டபைரவர்களையும் வழிபட்டால் சட்ட சிக்கல்கள் மற்றும் சத்துரு உபாதைகள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். சீர்காழியில் அவதரித்த சிறு குழந்தையான ஞானசம்பந்த பெருமான் கோவில் குளக்கரையில் பசியால் அழ, பார்வதி தேவி பால் ஊட்ட அதனால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை பாடினார்
அதனை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின் 2வது நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும் இவ்வாண்டு திருமுலைப்பால் விழா இன்று கோலாகலமாக நடந்தது. திருமுலைப்பால் விழாவை முன்னிட்டு ஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து திருஞானசம்பந்தர் சன்னதியில் இருந்து பல்லாக்கில் புறப்பட்டு பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளினார். மலைக் கோவிலிலிருந்து உமாமகேஸ்வரி பல்லக்கில் தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். இதனையடுத்து பிற்பகல் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருஞானசம்பந்த பெருமாளுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து சிவபெருமானுடன் உமா மகேஸ்வரி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்த பெருமாளுக்கு காட்சி அளித்தனர். அப்போது சாமி, அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு மகா தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் குழந்தைகளுக்கு ஞானம் வேண்டி தாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த பழம், சக்கரை கலந்த பாலை சாமிக்கு நெய்வேத்தியம் செய்தனர். இந்நிகழ்வில் திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் தம்பிரான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை 23ம் தேதி சமணர்கள் தோற்றோடுதல் நிகழ்ச்சியும், 24 ம் தேதி புஷ்பா விமான காட்சியும், 25 ம் தேதி சகோபுர நிகழ்ச்சியும், 26 ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 27 ம் தேதி பிஷாடனர் உற்சவம், 28, 29 ஆகிய தேதிகளில் திருத்தேர் நிகழ்ச்சியும், 30ம் தேதி நடராஜர் உற்சவமும்,1 ம் தேதி மௌன உற்சவமும், 2ம் தேதி எதிர்க்காட்சி உற்சவமும், 3 ம் தேதி தெப்போற்சவம் நிகழ்ச்சியும், 4 ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், 8 ம் தேதி முத்துச்சட்டை நாதர் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் தலைமையிலான சிப்பந்திகள் செய்துள்ளனர்.