ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நிகழ்ச்சியில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியின் 9ம் நாளான நேற்று முன் தினம் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மாலை 5:45 மணிக்கு பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயில் வளாகத்தில் இருந்து மெயின் ரோடு, ஜம்புலிப்புத்தூர் வீதி வழியாக சென்ற தேர் சுவாமி ஓய்வு பெறும் நிகழ்வுக்காக பாதி வழியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை மீண்டும் தேரோட்டம் துவக்கப்பட்டு கோயில் வளாகத்தில் நிலைநிறுத்தப்படும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுதா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.