உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருப்பிடம் திரும்பினார் கள்ளழகர்: பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டி கழித்த பக்தர்கள்

இருப்பிடம் திரும்பினார் கள்ளழகர்: பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டி கழித்த பக்தர்கள்

அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய கள்ளழகரை பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.


அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, ஏப்30ம் தேதி எதிர்சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலாற்று சிறப்பு மிக்க அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி நடந்தது. பின் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று மாலை புதூரில் இருந்து புறப்பட்டு, இரவு அப்பன் திருப்பதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின் அதிகாலை புறப்பட்டு கோயிலுக்கு சென்றார். கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி முன் எழுந்தருளினார். அங்கு தீப ஆராதனைகள் நடந்தன. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை கூடியிருந்த பக்தர்கள் ""கோவிந்தா கோஷம் எழுப்பி மலர் தூவி வரவேற்றனர். பின் 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை அழகரை சுற்றி திருஷ்டி கழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !