திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு வார விடு முறையான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருவதால் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
திருத்தணி முருகன் கோவிலுக்கு சில மாதங்களாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் பெரும்பாலான பக்தர்கள் பேருந்து, வேன், கார் மற்றும் ஆட்டோக்களில் மலைக்கோவிலுக்கு வருகின்றனர். தற்போது மலைக்கோவிலில், 103 கோடியில் வளர்ச்சி பணிகள் நடப்பதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லை.
ஆகையால் மலைப்பாதையில் மேற்கண்ட வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் இன்று வார விடுமுறை ஞாயிறு என்பதால், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படும். படா செட்டி குளம் பகுதியில் உள்ள இடவசதிக்கு ஏற்ப சில கார்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் மலைப்பாதை நுழைவாயிலில் இருந்து, படா செட்டி குளம் வரை இலவசமாக 10 பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட தகவலை கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.