உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தரங்கம்பாடி கடற்கரையில் மீன் வடிவ சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு

தரங்கம்பாடி கடற்கரையில் மீன் வடிவ சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு

மயிலாடுதுறை; திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மீன் வடிவில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை திருவிடைக்கழி முருகப்பெருமான் வதம் செய்யும் ஐதீக நிகழ்வு தரங்கம்பாடி கடற்கரையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணியசுவாமி முருகன் கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாகமாகவும், சோழநாட்டு திருச்செந்தூர் என்றும் போற்றப்படுகிறது. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த பின்னர் மாயையால் தரங்கம்பாடி கடலில் மீன் வடிவில் மறைந்திருந்த சூரனின் இரண்டாவது மகனான இரணியாசூரனை வதம் செய்து சாப தோஷம் ஏற்பட திருவிடைக்கழி தலத்தில் முருகப்பெருமான் சிவனை பூஜித்து தனக்கு ஏற்பட்ட சாபதோஷம் நீங்க பெற்ற தலமாக திகழ்ந்து வருகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றிப் புகழப்பட்டுள்ள இக்கோவில் முருக பெருமானும், சிவபெருமானும் ஒன்று என்ற தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே திருத்தலமாகும். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால் முருகபெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறாம் திருநாளான இன்று முருகப்பெருமான இரண்யாசூரணை வதம் செய்யும் புராண வரலாறு நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மூலவரிடமிருந்து உற்சவர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை தரங்கம்பாடி கடற்கரைக்கு எழுந்தருள செய்யப்பட்டார். அங்கு தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் கடற்கரையில் மீன் வடிவில் இருந்த  இரண்யாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. பின்னர் தரங்கம்பாடி மாவட்ட தலைமை கிராமத்தினர் சீர் வரிசை எடுத்துவந்து முருகனுக்கு சமர்ப்பித்தனர். தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டது. பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் பிரேம்குமார், ஆய்வர் பத்ரிநாராயணன், பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சுனாமிக்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்த ஐதீக திருவிழா 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2வது ஆண்டாக வெகு விமரிசையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !