குழந்தை வேலப்பர் கோவிலில் கால பைரவர்க்கு தீர்த்தக் காவடி எடுத்து வழிபாடு
ஒட்டன்சத்திரம்; தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் திருக்கோயில் காலபைரவருக்கு அண்ணாமலையார் தீப ஆராதனை குழு சார்பில் தீர்த்த காவடி எடுத்து சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு செய்யப்பட்டது.
பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கலசங்களில் கொண்டுவரப்பட்ட தீர்த்த காவடிகள் நேற்று முன்தினம் மாலை ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக குழந்தை வேலப்பர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. காலை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு தீர்த்தங்கள் செலுத்தப்பட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதி சேர்ந்த ஏராளமானோர் பைரவரை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானமும் நடந்தது. அருள்மிகு அண்ணாமலையார் தீப ஆராதனை குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.